ஆஷூரா நோன்பின் சட்டங்கள்

High angle shot of swirling turquoise ocean waves creating a dynamic seascape pattern.

அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளின் அந்தஸ்த்து

ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: 

أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ

ரமதான் மாத நோன்பிற்கு அடுத்தபடியாக, நோன்புகளில் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்புகளாகும்.

அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு)  |  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1163)

முஹர்ரம் 10ஆம் நாளன்று நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு (பலன்)

ரசூலுல்லாஹி ﷺ கூறுகிறார்கள்: 

صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ

ஆஷூரா நாளின் நோன்பு, அந்நாளின் முன் சென்ற வருடத்தின் பாவங்களை மன்னிக்க அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரதியல்லாஹு அன்ஹு)  |  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1162)

ஹதீஸில் இடம் பெற்றுள்ள பாவமன்னிப்பு சிறு பாவங்களையே குறிக்கின்றது. பெரும் பாவங்கள் ஒருவருக்கு மன்னிக்கப்பட வேண்டுமெனில் அப்பெரும்பாவத்திற்கு அவர் தவ்பா செய்திருக்க வேண்டும்.

ஷைய்குல் இஸ்லாம் இப்னு தய்மியா (ரஹிமஹுல்லாஹ்)

மார்க்கத்தில், தூய்மை, தொழுகை, ரமதான் நோன்பு, அரஃபா மற்றும் ஆஷூரா நோன்பு ஆகிய அமல்களின் கூலிகளாக இடம்பெற்றுள்ள பாவமன்னிப்பு சிறுபாவங்களுக்கான பாவமன்னிப்பாகும்.

நூல்: அல்ஃபதாவா அல்குப்ரா 5/344

பெரும்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமெனில், ஒருவர் தவ்பா செய்வதற்கு மூன்று நிபந்தனைகளை உலமாக்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்:

  1. செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துதல்.
  2. அப்பாவத்தை செய்யாது முற்றிலுமாக நிறுத்தி, அதை முழுமையாக விட்டுவிடுதல்.
  3. மறுபடியும் அப்பாவத்தின் பக்கம் திரும்பமாட்டேன் என்று உறுதியாக முடிவெடுத்தல்.

(அல்-இமாம் இப்னு பாஸ் -ரஹிமஹுல்லாஹ்-, நூல்: நூருன் அலத்தர்ப் 9730)

உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.

சூரா அன்னிஸா — 4:31

ஆஷூரா நோன்பின் காரணம்

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ، فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ ؟ “. فَقَالُوا : هَذَا يَوْمٌ عَظِيمٌ ؛ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ، وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ ؛ فَصَامَهُ مُوسَى ؛ شُكْرًا ؛ فَنَحْنُ نَصُومُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ “. فَصَامَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَ بِصِيَامِهِ.

ரசூலுல்லாஹி ﷺ மதீனாவை வந்தடைந்த பொழுது, யூதர்கள் (முஹர்ரம் பத்தாம் நாளான) ஆஷூரா நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ரசூலுல்லாஹ் ﷺ அவர்களிடம், “நீங்கள் நோன்பு நோற்கும் இந்த நாள் என்ன நாள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “இந்த நாள் மகத்துவமான நாள். இந்நாளில் தான் அல்லாஹ் மூசாவையும் — மற்றும் அவர்களின் கூட்டத்தார்களையும் காப்பாற்றினான். ஃபிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்தார்களையும் அல்லாஹ் மூழ்கடிக்கச் செய்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலைஹிஸ்ஸலாம்) இந்நாளில் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்களும் நோன்பு நோற்கிறோம்” என்றார்கள் (யூதர்கள்).

அதற்கு ரஸூலுல்லாஹி ﷺ கூறினார்கள்: “உங்களைவிட நாங்கள்தான் மூசாவின் மேல் அதிக உரிமையுள்ளவர்களாகவும் (மூஸாவிற்கு) முதன்மையானவர்களாகவும் இருக்கிறோம்.” அதனால் ரஸூலுல்லாஹி ﷺ அந்நாளில் நோன்பு நோற்றார்கள் (மற்றவர்களையும்) நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு)  |  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (1130)

ஆஷூரா நோன்பை எவ்வாறு நோற்பது?

ஆஷூரா நோன்பு (முஹர்ரம் பத்தாம் நாளன்று) மட்டும் தனித்து நோற்பதற்கு அனுமதி உள்ளது. (அறிஞர்கள் ஃபத்வா குழு 11/401).

ஷைய்குல் இஸ்லாம் இப்னு தய்மியா (ரஹிமஹுல்லாஹ்)

ஆஷூரா நோன்பு (முந்தைய) ஒரு வருட பாவங்களை அழிக்கின்றது. அதனை (ஒரு நாள் மட்டும்) தனித்து நோற்பது வெறுக்கத்தக்கதல்ல.

நூல்: அல் ஃபதாவா அல் குப்ரா 5/378

ஆனால் அதைவிட சிறந்தது: ஆஷூரா (10 ஆம்) நாளிற்கு முன் உள்ள ஒரு நாளுடன் சேர்த்து (9, 10) அல்லது அதற்கு பின் உள்ள ஒரு நாளுடன் சேர்த்து (10, 11) நோற்பது சிறந்ததாகும். (அறிஞர்கள் ஃபத்வா குழு 11/401).

அஷ்ஷைய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

9 மற்றும் 10 நோற்பது ஆகச்சிறந்ததாக இருக்கின்றது. ஏனெனில் ரஸூலுல்லாஹி ﷺ:

لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ

“அடுத்த வருடம் நான் இருந்தால் (பத்துடன் சேர்த்து) ஒன்பதையும் நிச்சயம் நோற்பேன்” என்று கூறினார்கள்.

முஸ்லிம் — 1134

அதேபோல், 10 மற்றும் 11 அல்லது 9-10-11 ஆகிய மூன்று நாட்கள் நோற்றாலும் நன்மையே. (நூறுன் அலத்தர்ப் 17253). ஏனெனில் அவ்வாறு தனித்து நோற்காமல், (இரண்டு நாட்களாக) சேர்த்து நோற்பது, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காண்பிக்கின்றதாக இருக்கிறது.

ஷைய்குல் இஸ்லாம் இப்னு தய்மியா (ரஹிமஹுல்லாஹ்)

நபி ﷺ யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பின்பற்றுவதிலிருந்து நம்மை தடுத்துள்ளார்கள் என்ற பல ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு உதாரணம் ஆஷூரா நோன்பை (யூதர்களைப் போல் தனித்து நோற்காமல் மற்றொரு நாளோடு சேர்த்து நோற்பதை) குறிக்கும் ஹதீஸ்:

“அடுத்த வருடம் நான் இருந்தால் (பத்துடன் சேர்த்து) ஒன்பதையும் நிச்சயம் நோற்பேன்” (முஸ்லிம்-1134)

நூல்: அல் ஃபதாவா அல்குப்ரா 6/175

இப்னு அப்பாஸ் ரதியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

யூதர்களுக்கு ஒப்பாகாமல் அவர்களுக்கு மாற்றமாக நடந்து கொள்ளுங்கள். ஆகையால் ஆஷூரா நோன்பு பத்துடன் சேர்த்து ஒன்பதையும் நோற்றுக் கொள்ளுங்கள்.

முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் — 7839

ஆஷூரா நாள் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பித்அத்கள்

⚠ எச்சரிக்கை
ஷைய்குல் இஸ்லாம் இப்னு தய்மிய்யாஹ் (ரஹிமஹுல்லாஹ்)கூறுகிறார்கள்:

சுன்னாவின் (நபிவழி) பக்கம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் நிறைய பேரிடம் சில ஹதீஸ்கள் பரவி கிடக்கின்றன. மேலும் அவர்கள், அவைகளை சுன்னாஹ் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலோ அந்த ஹதீஸுகள் பொய்யானதாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு ஆஷுரா நாளில் நோன்பு அல்லாத மற்ற சிறப்புகளைப் பற்றி அறிவிக்கும் ஹதீஸ்கள்:

  • அந்நாளில் கண்களுக்கு சுருமா இடுவது
  • பிரத்யேகமாக குளிப்பது
  • கூட்டாக அமர்ந்து பேசுவது
  • தலை முடிக்கு ஹென்னா தடவுவது
  • ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்வது
  • குடும்பத்தார்களுக்கு அந்நாளில் தாராளமாக செலவு செய்வது போன்ற விஷயங்கள்

இவை அனைத்திற்கும் எந்த ஒரு மார்க்க ஆதாரமும் இல்லை. மற்றும் இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டிய பித்அத்களாகும்.

அதேபோல் அந்நாளில் குறிப்பிட்ட தொழுகைகளை நிறைவேற்றுவதின் சிறப்புகள் என்றும், ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

மேலும் இப்படிப்பட்ட ஹதீஸ்களை மார்க்க அறிஞர்கள் இமாம்கள் ஒருவர்கள்கூட தங்களின் புத்தகங்களில் இடம்பெறச் செய்யவில்லை.

மின்ஹாஜ் அஸ்ஸுன்னா அந்நபவிய்யா (7/433) · அல் ஃபதாவா அல் குப்ரா (194/1)
ஷைய்குல் இஸ்லாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆஷுரா நாளில் நபி ﷺ எந்த நோன்பை கட்டளையிட்டார்களோ அதனை நிறைவேற்றுபவர்களாகவும் (அதேநேரம், அந்நாளில்) பித்அத்களை செய்யுமாறு கட்டளையிடும் ஷைத்தானின் கட்டளைகளை விட்டு ஒதுங்கி தூரமாக இருப்பார்கள்.

அல் மனார் அல் முனீஃப (பக்கம்: 111)

Scroll to Top